Index Labels

குருவார மகாலட்சுமி விரதம் : பூஜை செய்யும் முறை

. . No comments:
சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் ஸ்வஸ்திக் அல்லது ஐஸ்வர்ய கோலம், போட்டு, அதன் மேல் பலகையை வைக்க வேண்டும். பலகையின் நான்கு மூலைகளிலும் கோலமிட்டு அதன் நடுவே அரிசி அல்லது கோதுமையை பரப்பி, அதன் மேல் மஞ்சள் மற்றும் குங்குமத்தால் கோலம் போட வேண்டும்.

கலசத்தில் சுத்தமான நீர்பரப்பி, அதனுள் சிறிது அருகம்புல், ஒரு கொட்டைப் பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் போட வேண்டும். பின்னர் ஐந்து விதமான சிறு அளவிலான மரக்கிளைகளை (இலைகளுடன்) கலசத்திற்குள் சொருகவும்,  மா, பலா, கொய்யா, சப்போட்டா, அரசு, ஆல மரக்கிளைகளே பூஜைக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இதில் ஏதேனும் ஐந்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட மரக்கிளைகள் கிடைக்காதவர்கள் ஐந்து வித முள் இல்லாத பூச்செடிகளின் கிளைகளையும் வைக்கலாம். கலசத்திற்கு மஞ்சள், குங்குமத்தால் பொட்டிட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

கலசத்தின் நடுவில் தேங்காயை வைக்க வேண்டும். மகாலட்சுமியின் படத்தையும், எந்த்ரத்தையும் கலசத்தின் முன்பு வைத்து சந்தனம் குங்குமமிட்டு முடிந்தளவு பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்தின் அருகே ஒன்றேகால் ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். கலசத்திற்கு முன் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

பிறகு நிவேதனப் பொருட்களை கலசத்தின் முன் வைக்கவும். பிறகு ஆசமனம், சங்கல்பம் செய்து விநாயகர் பூஜையையும், ஸ்ரீ மகாலட்சுமி பூஜையையும் செய்ய வேண்டும். அவைகள் முறையே தியானம், பிராணாயாமம், சங்கல்பம், கலச பூஜை,

கண்டா பூஜை, தியானம், மஞ்சள், குங்குமம், மலர்களால் வழிபாடு, தூப - தீப நமஸ்காரம், மற்றும் நைவேத்யம் செய்யப்பட வேண்டும். பிரசாதமாக வைக்கப்படுவதில் வாழை பழம், மற்ற பல பழ வகைகள் மற்றும் பால் அவசியம், முடிவில் புத்தகத்தில் உள்ள லட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமியஷ்டகம்,

ஸ்ரீ மகாலட்சுமி துதி படித்து விட்டு ஸ்ரீலட்சுமி விரத கதை படிக்க வேண்டும். அதன் பின் ஆரத்தி பாடல்களை படித்து ஆரத்தி எடுக்க வேண்டும். இவையாவும் காலையில் செய்ய வேண்டியது. இரவு மீண்டும் பஞ்சோபசார பூஜை செய்து, மகா நைவேத்யம் அளிக்க வேண்டும்.

இவற்றிலிருந்து ஒரு வெற்றிலையையும் சிறிது நைவேத்தியத்தையும் தனியே எடுத்து வைத்து, அதை அடுத்த நாள் காலை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். மறு நாள் காலையில், கலசத்திற்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு கலச தீர்த்தத்தை,

பூஜை செய்பவர் சிறிது உட் கொண்டு தெளித்து கொண்டு, வீடு முழுவதும் தெளித்து, வந்தவர்களுக்கும் தீர்த்தமாகக் கொடுத்து மீதியை செடியில் ஊற்ற வேண்டும். கீழ் உள்ள அரிசியை, தினமும் சமையல் செய்ய உபயோகப்படுத்தும் அரிசியுடன் சேர்த்து கொள்ளலாம்.

படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் நாணயத்தை தனியே எடுத்து வைத்துக் கொண்டு எல்லா வியாழக்கிழமைகளிலும் அதையே உபயோகிக்கவும். ஒன்றேகால் ரூபாயும், பூஜித்த பூக்களையும் ஒரு கவரில் போட்டு பத்திரமாக வைக்கவும்.

கடைசி வியாழனன்று பூஜை முடிந்தவுடன், ஒவ்வொரு வியாழனும் சேர்த்து வைத்த பூக்கள், பூஜித்த கலச தேங்காய், பாக்கு இவற்றை கிணற்றிலோ, கடலிலோ சேர்த்து விட வேண்டும். ஒன்றே கால் ரூபாயை பர்சிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீ மகாலட்சுமி விரதத்தை மேற் கொள்பவர்களுக்கும்,

அதில் கலந்து கொள்பவர்களுக்கும் செல்வம் பெருகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். இந்த குருவார ஸ்ரீ மகாலட்சுமி விரதம் ஸ்ரீபத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பக்தியுடனும் நியமத்துடனும் இந்தப் பூஜை செய்யும் பெண்களை விட்டு மகாலட்சுமியானவள் என்றும் விலகாமல் காப்பாற்றுவாள். தனம், தான்யம், புகழ் மற்றும் பூரண அருள் கிடைக்கும். துக்கம், தரித்திரம் விலகும். பூரண கிருபை உண்டாகும், குலம் தழைக்கும், ஆசைகள் பூர்த்தியாகும்.

No comments:

Post a Comment

Popular Posts